தென்காசியில் குடிநீர் கேட்டு மமக சார்பில் பாய்விரித்து வாசலில் படுத்து உறங்கும் போராட்டம்!
குடிநீர் கேட்டு மமக சார்பில் படுத்து உறங்கும் போராட்டம் நடைபெற்றது.
நெல்லை: தென்காசியில் குடிநீர் கேட்டு பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அத்துடன் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாய்விரித்து வாசலில் படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சி 33 வார்டுகளை கொண்ட நகராட்சியாகும். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் குற்றாலம் குடிநீர் மற்றும் தாமிரபரணி நீரும் நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இங்குள்ள பெரும்பாலான வார்டுகளுக்கு வாரம் ஒரு முறை, மாதம் இருமுறை என்ற முறையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர தண்ணீர் வரவில்லை எனவும் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நேற்று தென்காசி நகர மனித நேய மக்கள் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாய் விரித்து வாசலில் படுத்து உறங்கும் போராட்டம் நடைபெற்றது.
அகமதுஷா தலைமையில் முன்னாள் கவுன்சிலர் சலீம் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாய் விரித்து வாசலில் படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு நகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுவை பெற்றுக்கொண்டு தண்ணீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.