5 நாட்களுக்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில் விழுங்கிய பெண் பரிதாப மரணம்!
கண்டமங்கலம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே 5 நாட்களுக்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில் விழுங்கிய பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரை அடுத்த கலிங்கமலையை சேர்ந்தவர் சம்பத். கூலி தொழிலாளி. இவரது மனைவி பிருந்தா லட்சுமி. பிருந்தாலட்சுமி கடந்த 5 ஆண்டுகளாக நோயின் பிடியில் சிக்கியிருந்தார். அதில் இருந்து குணமடைவதற்காக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.
சூழ்நிலை காரணமாக அவர் தொடர்ந்து 5 நாட்களாக மாத்திரை போட்டுக் கொள்ளவில்லை. எனவே, நோயின் தாக்கம் அதிகரித்தது. உடனே பயந்து விட்ட பிருந்தாலட்சுமி விடுபட்ட 5 நாட்களுக்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில் தின்றார். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சம்பத், மைத்துனர் மாணிக்கவாசகத்தின் உதவியுடன் பிருந்தா லட்சுமியை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பிருந்தாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை வருகின்றனர்.