வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி பெண் படுகாயம்.. அச்சத்தில் பொதுமக்கள்
சிறுத்தை தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
வால்பாறை: வால்பாறை அருகே வீட்டின்முன் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்ணை சிறுத்தையை தாக்கியது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் சத்துணவு மையத்தில் வேலை செய்து வரும் மகாலட்சுமி வயது 36. இவர் அவரது வீட்டின் வெளியே வேலை செய்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென்று அந்த பெண்ணை தாக்கியது.
இதில் மகாலட்சுமி அலறி துடித்தார். அவரது சத்தத்தை கேட்டு வீட்டின் அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து சிறுத்தையை விரட்ட முயற்சித்தனர். இதனால் சிறுத்தை மகாலட்சுமியை விட்டு ஓடியது. சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் இருந்த மகாலட்சுமி உடனடியாக மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாலட்சுமியின் கை, கால், மற்றும் தொடையில் பலத்த காயங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை பெண்ணை தாக்கியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.