பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மர்ம மரணம்.. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முற்றுகை
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால், உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரத்தை அடுத்த வன்னிக்குடியை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ராதா பிரசவத்துக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்றிரவு ராதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் அஜாக்ரதையால்தான் ராதா இறந்ததாகவும், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மதுரை- ராமேஸ்வரம் சாலையில் அரசு மருத்துவமனை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோட்டாட்சியர் சுமன் நேரில் வந்து போராட்டக்கார்களிடம் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.