பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை... ஜிப்மர் மருத்துவமனையில் அதிர்ச்சி
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் பெண் டாக்டர் விஷ ஊசிபோட்டுத் தற்கொலை செய்துகூட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசிபோட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவத்தால் அங்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுவை கதிர்காமம் ஆனந்தா நகர் இளங்கோ வீதியில் உள்ள கணபதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஷாலினி. இவரின் மகள் ரேஷ்மி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்களுக்குச் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மைசூரு. ரேஷ்மி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. படிப்பை முடித்து,பின்னர் ஜிப்மர் மருத்துவமனையிலேயே டாக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் ரேஷ்மியின் தாயார் ஷாலினி மைசூருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்றுக் காலை வெகுநேரமாகியும் ரேஷ்மி மருத்துவமனை டியூட்டிக்கு வரவில்லை. இதனால் அவருடன் பணிபுரியும் சக டாக்டர்கள் ரேஷ்மியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், அவர் செல்போனை எடுக்கவில்லை.
உடனே ரேஷ்மிவசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பார்த்தனர். அப்போது அவருடைய வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை பல முறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரேஷ்மி அவருடைய அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அங்கிருந்து மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது ரேஷ்மி இறந்து விட்டது தெரியவந்தது. ரோஷ்மி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷ்மி சாவுக்கான காரணம் என்ன? காதல் தோல்வியா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தச் சம்பவம் ஜிப்மர் மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.