என்னுடைய 11 கேள்விகளுக்கு விடை தாருங்கள்... கொலையான சென்னை பெண் டாக்டரின் கணவர் கேட்கிறார்
சென்னை: சென்னையில் பெண் டாக்டர் சத்யா கொலை வழக்கில் 11 சந்தேகங்கள் இருப்பதாக அவரது கணவரும் டாக்டருமான ஜேசு கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த டாக்டர் சத்யா கடந்த 20 ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கில், திடீர் திருப்பமாக சத்யா வசித்து வந்த அதே அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹரிந்தம் ஹேப்நாத் என்பவர் கொலை செய்திருந்தது தெரியவந்தது.
மைக்ரோமேக்ஸ் செல்போனை திருடும்போது சத்யா கண் விழித்ததாகவும் இதனால், பயந்துபோன ஹரிந்தம், சத்யாவை கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திரிபுராவை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான ஹரிந்தம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சத்யாவின் கொலை செல்போன் திருட்டை தடுக்கும் முயற்சியில் நடந்த கொலை அல்ல. அதற்கு வேறு காரணம் இருக்கலாம் எனவும், கொலை சம்பந்தமாக 11 கேள்விகளை கேட்டும், பெரம்பலூரை சேர்ந்த அவரின் கணவர் டாக்டர் ஜேசு கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் பிரதேஷ் குமாருக்கு மனு ஒன்று அளித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எனது மனைவி சத்யாவின் கொலை தொடர்பாக தங்களை சந்தித்தபின் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள்:
சத்யாவின் கொலை ஒன்றுக்கு மேற்பட்ட மற்றும் கொலையை தொழிலாக செய்பவர்கள் அல்லது மருத்துவத்துறையில் அனுபவம் மிக்க ஒருவரால் செய்யப்பட்டதுபோல் தெரிகிறது.
கொலையாளியை உடன் தங்க வைத்திருந்த அவரது அண்ணன் டாக்டர் சிரஞ்சித்தும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவராக இருக்கலாம்.
கைரேகையின் பதிவு, சம்பவம் நடந்த வீட்டின் எந்த பகுதியிலும் கிடைக்கவில்லை என கூறுகிறீர்கள். கொலை நடந்த விதத்தையும், வாக்குமூலத்தையும் வைத்து பார்க்கும்போது கைரேகைகள் பல இடங்களில் பதிவாகி இருக்க வாய்ப்பு உள்ளது.
நீதிமன்றத்தில் கைரேகைப் பதிவு ஒப்பீடு இல்லாமல் குற்றவாளிக்கு எவ்வாறு தண்டனை பெற்றுத் தர முடியும்.
காவல்துறை கூறும் ஆதாரங்கள் அனைத்தும் சம்பவத்திற்கு பிறகு கொலையாளியாக கூறப்படும் நபருடன் தொடர்புள்ளதாக சொல்லப்படுகிறதே தவிர சம்பவத்திற்கும் அவருக்கும் தொடர்பு படுத்தும் விதமான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
டாக்டர் சங்கீதா கொலையாளியை இக்குடியிருப்பில் இதற்கு முன் பார்த்ததே இல்லை என உறுதியாக கூறுகிறார்.
அங்கு பணிபுரிந்த வேலைக்கார பெண் கடந்த ஒரு வாரமாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். அதற்கான காரணம் தெரியவில்லை.
ரத்தக்கரை படிந்த துணி கொலையாளியின் அறையில் இருந்ததாக சொல்லப்படும்போது மோப்ப நாய் அந்த அறையை காட்டவில்லை.
கொலை செய்த நபர் தனது அடையாள அட்டை மற்றும் தனது போட்டோவை அதே செல்போனில் படம் எடுக்க எவ்வாறு அனுமதித்திருக்க முடியும்.
எனது மனைவி படித்த மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு (எம்எஸ்) ரூ.2 கோடிக்கு குறையாமல் செலவாகும். அந்த சீட்டை குறுக்கு வழியில் பெற யாரேனும் முயற்சிக்கலாமோ என்ற சந்தேகம் வருகிறது.
காவல்துறை காட்டும் அனைத்து ஆதாரங்களும் கொலையாளி சட்ட ரீதியாக தப்பிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவே இருக்கிறது. இந்த சந்தேகங்களின் அடிப்படையில் தீவிரமான விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.