கள்ளக் காதலுக்காக விஷம் குடித்த பெண்மணி - மருத்துவமனையில் அனுமதி
பெரம்பலூர்: பெரம்பலூரில் கள்ளக் காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரிக்கை விடுத்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் மாவட்டம் பேரளியை சேர்ந்த மாணிக்கம் மகன் கண்ணதாசன். அதே ஊரைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி லதா. கண்ணதாசனுக்கும், லதாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.இருவரும் கடந்த 2 வருடத்துக்கு முன் சென்னை சென்று குடும்பம் நடத்தி வந்தனர்.
கடந்த மாதம் ஊருக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்ற கண்ணதாசன் மீண்டும் சென்னைக்கு வரவில்லை. அவருக்கு லதா போன் செய்தபோது கட் செய்து வந்தார்.இதனால் சந்தேகமடைந்த லதா கடந்த 13 ஆம் தேதி பேரளிக்கு வந்து கண்ணதாசன் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனால் கண்ணதாசன் வீட்டு முன் லதா உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து கண்ணதாசனின் பெற்றோருக்கும், லதாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
தகவலறிந்த மருவத்தூர் போலீசார் அங்கு சென்று இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் லதாவை போலீசார் விசாரணைக்கு அழைத்ததன் பேரில் நேற்று மதியம் மருவத்தூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். அங்கு கண்ணதாசனும் இருந்தார். அப்போது அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என போலீசாரிடம் லதா வற்புறுத்தி வந்தார்.
ஆனால் இதற்கு கண்ணதாசன் சம்மதிக்காததாலும், போலீசார் தனக்கு எதிராக செயல்படுவதாலும் மனமுடைந்த லதா, போலீஸ் ஸ்டேஷனிலேயே தான் வைத்திருந்த விஷ விதைகளை தின்று தற்கொலைக்கு முயன்று மயங்கினார்.போலீசார் அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் லதா சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.