டாஸ்மாக்கில் ஃபுல் போதையில் ரகளை செய்த பெண்- திண்டுக்கல்லில் பரபரப்பு!
திண்டுக்கல்: திண்டுக்கல் டாஸ்மாக் ஒன்றில் பெண் ஒருவர் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் - திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே பாண்டியன் நகரில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று மாலை கிட்டதட்ட 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் மிடுக்கான உடை அணிந்து மது குடிக்க வந்தார்.
டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலை வாங்கிக் கொண்டு பாரில் உட்கார்ந்து மது அருந்தினார். சிறிது நேரத்தில் போதை தலைக்கேறவே அங்கிருந்த ஊழியர்களிடமும், மது குடிக்க வந்தவர்களிடமும் ரகளையில் ஈடுபட்டார்.
அரை மணி நேரத்துக்கு பிறகு அந்த பெண்ணை பார் ஊழியர்கள் வெளியேற்றினர். அதன்பிறகு அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆனால் அவரால் தனது முகவரியை கூட தெளிவாக சொல்ல முடியவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர் அங்கேயே அவரை இறக்கிவிட்டு சென்று விட்டார்.
அதன்பின் அங்கிருந்த கடை முன்பு படுத்து விட்டார். சிறிது நேரம் கழித்து ஆட்டோவில் வந்த 3 இளைஞர்கள் அந்த பெண்ணை காப்பகத்தில் கொண்டு சேர்ப்பதாக கூறி அவரை ஆட்டோவில் ஏற்றினர்.
சந்தேகம் அடைந்த டாஸ்மாக் பணியாளர்கள் "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்" என கேட்டதற்கு, தொண்டு நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என கூறினர். அடையாள அட்டையை கேட்டபோது அவர்கள் விழித்தனர். தவறான எண்ணத்துடன் அந்த பெண்ணை கடத்த முயன்றது தெரியவரவே அவர்கள் சத்தம்போட்டு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு பெண் காவலர்கள் வந்து ரகளையில் ஈடுபட்டு மயங்கி கிடந்த அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.