சென்னையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையன்.. அடுத்து நடந்தது விபரீதம்
மதுரவாயலில் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்யப்பட்டதை அடுத்து தவறி விழுந்த பெண் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
Recommended Video
சென்னை: மதுரவாயலில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து பெண் தவறி விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆவடி, பக்தவச்சலபுரம், பிரகாசம் தெருவை சேர்ந்தவர் ரவி (45). ஆவடியில் உள்ள கனரக தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி (43).
இவரது தாய்க்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்கு கணவன், மனைவி இருவரும் நேற்று இரவு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் செண்பகவல்லி அருகில் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். சற்று சுதாரித்துக்கொண்ட செண்பகவல்லி கொள்ளையர்களிடமிருந்து தனது தங்க செயினை பாதுகாத்துக் கொள்ள செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அப்போது நிலை தடுமாறி செண்பகவல்லி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதனைக்கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர். கீழே விழுந்ததில் செண்பகவல்லி தலையின் பின்புறம் பலத்த காயமும், வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
இதையடுத்து ரவி உடனே தனது மனைவியை மீட்டு நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயன்றபோது பெண் தவறி கீழே விழுந்து காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.