ரோட்டில் பைக் ரேஸ் போன இளைஞர்கள்: சாலையில் சென்ற பெண் படுகாயம்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் அருகே பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரின் வாகனம் மோதி சாலையில் சென்று கொண்டிருந்த பெண் படுகாயம் அடைந்தார்.
சென்னையில் போலீஸாரின் தடை மற்றும் தீவிரக் கண்காணிப்பையும் மீறி இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவது அதிகரித்து வருகிறது. அதிவேகமாக ஓட்டப்படும் பைக்குகள் மோதியும், கீழே விழுந்தும் பலர் பலியாகியுள்ளனர். ஆனாலும் இதை இளைஞர்கள் தொடரத்தான் செய்கிறார்கள்.
இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் அருகே 8 பேர் பைக் ரேசில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பிரபு என்ற இளைஞரின் பைக், சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டது.
இதில் அந்த இளைஞரும், சாலையில் சென்று கொண்டிருந்த முத்துலெட்சுமி என்ற பெண்ணும் படுகாயம் அடைந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமான நிலையம் அருகே போக்குவரத்து மிகுந்த சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துலெட்சுமியின் உறவினர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 8 பேர் பைக் ரேஸ் சென்றதாக தெரிகிறது. அப்போது சாலையில் சென்ற முத்துலெட்சுமி மீது ஒரு பைக் மோதியதில் அவரின் தலையில் அடிப்பட்டுள்ளது. காலில் இரண்டு இடங்களில் அடிபட்டுள்ளது. தற்போது எதுவும் சொல்ல முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.