திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் – புதுகையில் பெண் அதிகாரி கைது!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் திருமண உதவித் தொகையை வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் வினோவிற்கும், தஞ்சை மாவட்டம் முத்துக்கண்டியம் பட்டியைச் சேர்ந்த ஜான்சன்ராஜ் எனபவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
தனது மகளுக்கு தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தின் கீழ் ரூபாய் 25 ஆயிரம் பணம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கக் கோரி ராஜன் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட சமூக நல விரிவாக்க அலுவலர் ராணி கடந்த 6 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்துள்ளார். பின்னர் ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் மனு மீது நடவடிக்கை எடுத்து உதவி வழங்குவேன் என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜா புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தங்கவேலுவிடம் புகார் செய்தார். புகாரையடுத்து ரசாயணம் தடவிய 1000 ரூபாயை போலீசார் ராஜாவிடம் கொடுத்தனர். பணத்துடன் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ராஜா சென்றார்.
பின்னர் ராணியிடம் முதல் தவணையாக ரூபாய் 1000 தருவதாகவும், மீதி பணத்தை பின்னர் தருவதாகவும் கூறி பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை ராணி வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பணத்துடன் பிடித்தனர்.
ராணியை கைது செய்து புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ராணி திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசாரல் பெண் அதிகாரி கைது செய்யப் பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.