குடியாத்தம் அருகே குடும்பத்தகராறில் பெண் வெட்டிக்கொலை
வேலூர்: குடியாத்தம் அருகேயுள்ள கே.வி.குப்பத்தில் தனது மனைவியுடன் தகாத முறையில் பழகிவந்த வாலிபரை கண்டித்து வைக்கும்படி அவரது தாயிடம் முறையிட்டபோது ஏற்பட்ட தகாரில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள கே.வி.குப்பம் அடுத்த மங்கானிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவருடைய மனைவி தனலட்சுமி . இவர்களது மகன்கள் செல்வகுமார் , சேகர் மற்றும் செந்தில் ராமச்சந்திரன். திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். மகள்கள் கலைச்செல்வி , பிரியங்கா ஆகியோர் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
ஏகாம்பரமும், தனலட்சுமியும் மாங்கானிப்பட்டியில் களத்துமேட்டில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். ஏகாம்பரத்தின் உறவினர் உத்திரன் இவரது மகன் நடராஜன். நடராஜன் திவ்யா என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்னை மேடவாக்கத்தை அடுத்த அகரம் பதவஞ்சேரி பகுதியில் ஏகாம்பரத்தின் 2-வது மகன் சேகர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருகிலேயே நடராஜனும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சேகர், நடராஜனின் உறவினர் என்பதால் அவரது வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது சேகர், நடராஜனின் மனைவி திவ்யாவிடம் பழகி வந்துள்ளார். மேலும் செல்போனிலும் பேசி வந்துள்ளார். இதனால் அவர்களின் நடத்தை மீது நடராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு நடராஜன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாங்கானிப்பட்டியில் உள்ள சேகரின் பெற்றோர் வீட்டிற்கு சென்று அவர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
அப்போது நடராஜனுக்கும், சேகரின் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நடராஜன் ஏகாம்பரத்தின் கை, தலை, தொடை பகுதிகளில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த ஏகாம்பரத்தின் மனைவி தனலட்சுமியையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த ஏகாம்பரம் படுகாயங்களுடன் வெளியே சென்று அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்கள் பார்த்தபோது தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். படுகாயம் அடைந்த ஏகாம்பரத்தை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.