குழந்தையை திருடிக் கொண்டு ஆட்டோவில் “எஸ்கேப்” ஆன பெண்- போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோகாரர்!
செஞ்சி: மேல்மலையனூர் கோவிலில் 2 மாத ஆண் குழந்தையை திருடிக் கொண்டு ஆட்டோவில் தப்பிய பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை கிழக்கு தாம்பரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், ஜோதிடர். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு தினேஷ்குமார் என்கின்ற மகனும், கிருத்திகாதேவி என்ற மகளும், பிறந்து 2 மாதமே ஆன ஸ்ரீ ஹரி என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
வெளியூர் கோவில்களில் நடைபெறும் திருவிழாவுக்கு கார்த்திகேயன் சென்று அங்கு திரளும் பக்தர்களுக்கு ஜோதிடம் கூறுவது வழக்கம். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் கோவிலில் இன்று அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.
எனவே, இதில் பங்கேற்று ஜோசியம் கூற, நேற்று கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் மேல்மலையனூர் சென்றார். இரவில் அந்த கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் இடத்தில் அவர்கள் தூங்கினர்.
நள்ளிரவு 12 மணி அளவில் அபிராமி திடீரென கண்விழித்தார். அருகில் தூங்கிகொண்டிருந்த தனது கைக்குழந்தையை காணாததால் திடுக்கிட்டார். அலறி துடித்து, கணவனிடம் கூறினார். குழந்தை திருடப்பட்டதை உணர்ந்தனர். உடனே 2 பேரும் தங்களுடைய மகன், மகளுடன் மேல்மலையனூரில் உள்ள ஆட்டோ நிலையத்துக்கு சென்றனர். அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் நடந்த விபரீதத்தை கூறி, "யாரும் கைக்குழந்தையுடன் சென்றார்களா?" என கேட்டனர்.
அப்போது செஞ்சியில் இருந்து ஒரு ஆட்டோக்காரர் மேல்மலையனூருக்கு வந்தார். சற்று நேரத்துக்கு முன்பு செஞ்சி நோக்கி சென்ற ஆட்டோவில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் செல்வதாக கூறினார். இந்த தகவலை கேட்டவுடன் பிற ஆட்டோ டிரைவர்கள் சுதாரித்தனர். செஞ்சி நோக்கி கைக்குழந்தையுடன் ஒரு பெண் சென்ற அந்த ஆட்டோ டிரைவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த விஷயத்தை அந்த ஆட்டோவில் குழந்தையுடன் செல்லும் பெண்ணுக்கு தெரியப்படுத்த வேண்டாம். நேரடியாக செஞ்சி போலீஸ் நிலையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதன்படியே அந்த ஆட்டோ டிரைவரும் செயல்பட்டார். செஞ்சி மகளிர் போலீஸ் நிலையம் சென்று அந்த ஆட்டோ நின்றது. அதனை கண்டு அந்த வாகனத்தில் குழந்தையுடன் சென்ற அந்த பெண் மிரண்டார். நடந்த சம்பவத்தை ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் தெரிவித்து, குழந்தையுடன் அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.
அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால், அந்த கைக்குழந்தை தன்னுடையதுதான் என அந்த பெண் வாதம் செய்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் சாயம் வெளுத்தது. மேல்மலையனூர் கோவில் வளாகத்தில் அந்த குழந்தையை திருடியதை ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில், குழந்தையை திருடிய அந்த பெண் ஓசூர் அருகே உள்ள பூனம்பள்ளியை சேர்ந்த தமிழரசி என்பது தெரிய வந்தது. அந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை போலீசார் மீட்டனர்.
சற்று நேரத்தில் மற்றொரு ஆட்டோவில் கார்த்திகேயன் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து சேர்ந்தனர். பறி கொடுத்த தங்களுடைய குழந்தையை கண்டவுடன் கார்த்திகேயனும், அபிராமியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். தமிழரசியிடம் இருந்து மீட்கப்பட்ட கைக்குழந்தை ஸ்ரீஹரியை அபிராமியிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை திருடி ஆட்டோவில் கடத்திய தமிழரசி கைது செய்யப்பட்டார். அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.