சேலம் அரசு மருத்துவமனை பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு - விசாரணை தீவிரம்
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனை அலுவலக உதவியாளர் பழனியப்பன். இவர் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து மீட்டர் வட்டி வாங்குவதாகவும், கடன் வாங்கியவர்கள் வட்டி பணம் தராத பட்சத்தில் மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், அங்கு பணியாற்றும் ஏற்காட்டை சேர்ந்த பெண் ஊழியர் சிந்தாமணிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலக கண்காணிப்பாளரும், வக்கீலுமான ஜெயப்பிரகாஷ் மருத்துவமனை நிர்வாகத்திடம், ஐந்து மாதங்களுக்கு முன் புகார் அளித்தார். ஆனால், உயர் அதிகாரிகள் இந்த புகாரை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஜெயப்பிரகாஷ், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பினார்.
பின் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாரதிமோகனுக்கு முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து சிந்தாமணி, அலுவலக உதவியாளர் அசோக், மருத்துவ ஆவண காப்பாளர் ரத்தினவேல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.