திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி திருவிழா- லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதரித்த திருநாள். எனவே அன்றைய தினம் அவரை வழிபட்டால் வருடம் முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும். வைகாசி விசாக திருவிழா அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றாலும், அறுபடை வீடுகளளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெகு விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படும்.
வைகாசி விசாகத் திருவிழா திருச்செந்தூரில் வசந்த விழாவாக இம்மாதம் 2ம் தேதி தொடங்கி, பத்து நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் கோயிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின்பு சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோவிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
விசாக திருநாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை ஆகி தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவுபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும், பால் குடம் சுமந்தும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.