கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்று.. வெளுத்து வாங்கிய மழை.. லட்சக்கணக்கான வாழைகள் சாய்ந்தன!
சூறை காற்றுடன் பெய்த மழையில் லட்சக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன.
கன்னியாகுமரி: சூறைக்காற்றுடன் பெய்த மழையில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாழை மரங்கள் முறிந்ததால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழையை தெடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பரவலாக பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு அங்கு திடீரென சூறை காற்றுடன் கன மழை வெளுத்து வாங்கியது. தக்கலை, வேர்கிளம்பி, சுருளோடு, திருவட்டார் போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான வாழை மரங்கள் சூறை காற்றில் முறிந்து சேதமடைந்தன. மேலும் பல்லாயிரக் கணக்கான ரப்பர், தென்னை, ஆயினி போன்ற மரங்களும், அநேக மின்கம்பங்களும் முறிந்தன.
வாழைகள் சாய்ந்து விழுந்தது குறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், ஒகி புயலின் போது முறிந்த வாழை மரங்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்காத நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சூறை காற்றில் மாவட்டத்தில் லட்சக்கணக்கான வாழைகள் முறிந்துள்ளன.
உடனடியாக தமிழக அரசு முறையான நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பெருஞ்சாணி அணையில் 2 அடி தண்ணீர் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.