வடலூரில் தைப்பூச கோலாகலம்.. ஜோதி தரிசனம்... லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்
வடலூர், கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பெரும் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் இன்று நடந்து வருகிறது. காலை 6 மணிக்கு முதல் தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை காலை 5.30 மணி வரை விட்டு விட்டு 6 முறை ஜோதி தரிசனம் நடைபெறும். இதையொட்டி வடலூரில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளனர்.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்றேன் என்று பாடி ஜீவ காருண்யத்தை அன்றே உலகுக்கு எடுத்துரைத்தவர் வள்ளலார். சத்தியஞான சபையை இவர் வடலூரில் நிறுவினார். இங்கு ஆண்டு தோறும் தைப்பூசம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.
தைப்பூசத்தன்று ஜோதி தரிசினம் மிகப் பிரசித்தி பெற்றது. இதைக் காண லட்சக்கணக்கில் மக்கள் வடலூருக்கு வருவார்கள். இந்த ஆண்டு 145வது தோஜி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று ஜோதி தரிசனம் வெகு சிறப்பாக நடந்து வருகிறது.
காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10, பகல் 1, இரவு 7, 10, நாளை காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
ஜோதி தரிசனத்தை கண்டு தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கல் வடலூரில் குவிந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. வடலூரே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
காவல்துறை சார்பில் பாதுகாப்புக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல போக்குவரத்துக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, புதுச்சேரி, கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கும்பகோணம், வேலூர் ஆகிய பகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.