வண்டலூரில் குவிந்த மக்கள் கூட்டம்.. காணும் பொங்கல் உற்சாகம்!
சென்னை: காணும் பொங்கலையொட்டி நேற்று சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று காணும் பொங்கலை மக்கள் கொண்டாடினர். சமீப காலமாக சென்னையைத் தாண்டி இந்த காணும் பொங்கல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் களை கட்டி வருகிறது.
சென்னையில் கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு காணும் பொங்கலைக் கொண்டாடியது போல வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
பொங்கல் தொடங்கியது முதலே பூங்காவில் கூட்டம் அலை மோதிக் கொண்டுதான் இருந்தது. நேற்று காணும் பொங்கல் என்பதால் வழக்கத்தை விட பல மடங்கு கூட்டம் திரண்டதால் பூங்காவே குலுங்கிப் போனது.
மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடும் என்பதால் அதற்கேற்றார் போல பூங்கா நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மேலும் பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாக் கோலம் பூண்டு காணப்பட்ட பூங்காவில் பல்வேறு வகையான விலங்குகளையும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
சமீபத்தில் தப்பிச் சென்ற புலிகள் உள்பட பல விலங்குகளையும் மக்கள் கண்டு களித்தனர்.
பொதுமக்கள் வசதிக்காக அம்மா குடிநீர் பாட்டில்களும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. சாப்பாடு உள்ளிட்டவற்றுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
பாலவாக்கம் கடற்கரையில் காணும் பொங்கல்
சென்னையின் கடற்கரைப் பகுதிகளிலும் காணும் பொங்கலையொட்டி கூட்டம் அலைமோதியது. மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரைகளைப் போல பாலவாக்கம் கடற்கரையிலும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து காணும் பொங்கலை குடும்பத்தினர், உற்றார் உறவினர், நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.