கிணற்றை தானமாகக் கொடுத்த ஓபிஎஸ்... நன்றி தெரிவித்த லட்சுமிபுர கிராம மக்கள்
தனது கிணற்றையும் நிலத்தையும் தானமாக கொடுத்த ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்து கூட்டங்கள் நடத்தினர்.
தேனி: தேனிமாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தில் கிராமமக்களின் குடிநீர் தேவைக்காக, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பில் உள்ள கிணற்றையும் நிலத்தையும் தானமாக வழங்கியதால் கிராம மக்கள் ஒன்று கூடி நன்றி அறிவிப்பு கூட்டத்தை நடத்தினர்.
தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் விவசாயத்துக்காக அவரின் நிலத்தில் ராட்சத கிணறு ஒன்றை அமைத்தார். ஏற்கெனவே குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த கிராம மக்களுக்கும் இந்தக் கிணற்றால் மேலும் சிரமம் ஏற்பட்டது.
மக்கள் போராட்டம்
இதையடுத்து, லட்சுமிபுரம் கிராமத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஓபிஎஸ் கிணற்றை கிராமத்தினருக்கு ஒப்படைக்க முடிவு செய்தார்.
கிணறை தர கோரிக்கை
ஆனால் வேறு ஒருவருக்கு விற்கவும் செய்தனர் ஓபிஎஸ் தரப்பினர். இதனால் கொந்தளித்த கிராம மக்கள் கிணற்றை பொதுமக்களுக்கே ஒப்படைக்கும்படி பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வந்தனர்.
பத்திரப் பதிவு
இதனால் ஓபிஎஸ் தரப்பு லட்சுமிபுர கிராம மக்களுடன் பேச்சு நடத்த முடிவு செய்தது. இதனையடுத்து நேற்று ஒருவழியாக பத்திரப்பதிவு நிறைவடைந்தது.
நன்றி தெரிவிக்கும் கூட்டம்
பொது பயன்பாட்டுக்கு கிணறு மற்றும் நிலத்தை தானமாக கொடுப்பதாக பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது லட்சுமிபுர கிராம மக்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.