லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை? புகார் கொடுத்தவரே என்னுடன் செல்பி எடுத்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன்
சென்னை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் சென்னையில் லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகள் ராதிகா போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் மனைவியை விட்டு பிரிந்து மைத்துனியுடன் குடும்பம் நடத்துகிறார்; மகள்களிடம் தவறாக நடக்கிறார் என்ற புகார்களுடன் அண்மையில் ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்த போது இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஜீ தமிழ் டிவி நிர்வாகத்திடம் நாகப்பன் கெஞ்சினாராம். ஆனால் அவர் எதிர்ப்பையும் மீறி நிகழ்ச்சி ஒளிபரப்பானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது நாகப்பனின் மகள் ராதிகா புகார் கொடுத்துள்ளார்.
இதை மறுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், புகார் தந்த ராதிகா நிகழ்ச்சி முடிந்ததும் என்னுடன் செல்பி எடுத்தார். நாகப்பனின் மனைவி அம்பிகா தான் நாகப்பனை அதிகமாக திட்டினார். நாகப்பனின் மரணம் வருத்தம் அளித்தாலும் அவரால் 5 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுவதே என்னுடைய கடமை. நாகப்பன் மீது போலீசில் புகார் தெரிவிக்க மட்டுமே சொன்னோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.