தயா பொறியியல் கல்லூரி விவகாரம்: மு.க. அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமாக மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியை கட்ட அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் இடத்தை போலி பத்திரம் தயார் செய்து அபகரித்துவிட்டதாக இந்து அறநிலையத்துறை அதிகாரி முத்து மாணிக்கம் மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் இருக்கும் நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் கடந்த மாதம் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார் மு.க. அழகிரி மீது நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்றம் வரை சென்று மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி பெறப்பட்டது.
மேலும் அழகிரி மீண்டும் திமுகவில் சேரக்கூடும் என்று இருக்கும் நிலையில் அவர் மீது நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.