நில ஆக்கிரமிப்பு வழக்கு.. ஆதீனங்கள் பதிலளிக்க ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
ஆதீன மடங்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஆதீனங்கள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை: ஆதீன மடங்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஆதீனங்கள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆதீனங்கள் உள்ளன. இந்த ஆதீனங்களுக்கு சொந்தமாக பல நிலங்கள் இருக்கிறது. இந்த நிலங்கள் பல வெவ்வேறு நபர்களால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் சில மட்டுமே மடத்தின் நிர்வாகம் மூலமாக முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என்றார். தூத்துக்குடியில் உள்ள செங்கோல் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
அதேபோல் பல ஆதீனங்களிலும் இதே நிலை நீடிப்பதாகவும், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார். தமிழகம் முழுக்க 55,820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதாக வழக்கில் குறிப்பிட்டார்.
இதில் ஆதீனங்களை எதிர்மனுதாரராக நியமித்து நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. ஆதீனங்களில் சொத்து விவரத்தை சமர்ப்பிக்க சொன்னது. அறநிலையத்துறை அதிகாரிகள் எப்போது இவற்றை ஆய்வு மேற்கொண்டனர் என்றும் கேட்டது.
இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில் நில ஆக்கிரமிப்பு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் அமர்வு கேள்வி எழுப்பியது. மேலும் இதில் ஆதீனங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து ஆதீனங்களும் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.