நில மோசடி புகார்: காந்தி அழகிரி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு– முன்ஜாமின் மனு தாக்கல்
மதுரை: நில மோசடி புகாரை அடுத்து காந்தி அழகிரி உள்ளிட்ட 3 பேர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க காந்தி அழகிரி, மதுரை உயர்நிதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை திருமங்கலம், சிவரக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீது கடந்த வாரம் மதுரை உயர்நீதிமனறத்தில் நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் எனது கணவர் ராமமூர்த்தி 2014ல் உயிரிழந்து விட்டார். சிவரக்கோட்டையில் கணவரின் குடும்பத்திற்குச் சொந்தமான பூர்வீகச் சொத்து 25 சென்ட் நிலம் இருந்தது. சொத்தில் அவரது பங்கை பராமரிப்பதற்காக நிலம் பற்றி 2014 அக்டோபர்17ல் வில்லங்கச் சான்று பெற்றேன். அதில் மதுரையில் உள்ள தயா சைபர் பார்க் நிறுவனத்திற்காக அதன் நிர்வாக இயக்குனர் காந்தி அழகிரி பெயரில் சொத்துக்கள் கிரையம் செய்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தேன். பாண்டியராஜன் என்ற ஏஜன்ட் மூலம் கிரையம் செய்துள்ளனர். வில்லங்கச் சான்றில் எனது கணவர் மைனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனது மாமியார் துரோபதையம்மாள், மைத்துனர் ராஜேந்திரன் ஆகியோரிடம் கேட்ட போது அவர்கள்,'நிலத்தை விற்க உனது கணவர் சம்மதிக்கவில்லை. தயா சைபர் பார்க் நிறுவனத்தார் கூறியபடி அவர் மைனர் எனக்கூறி விற்பனை செய்தோம். இது பெரிய இடத்து விவகாரம்,' என கொலை மிரட்டல் விடுத்தனர். எனது கணவருக்கு சேர வேண்டிய பங்கை அபகரித்ததோடு, அவர் மைனர் எனக்காட்டி மோசடியாக பத்திரம் பதிவு செய்து கூட்டுச் சேர்ந்து ஏமாற்றிய துரோபதையம்மாள், ராஜேந்திரன், பாண்டியராஜன் மற்றும் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை எஸ்.பி.,யிடம் பிப்ரவரி 3ம் தேதி புகார் செய்தேன். அவர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு அனுப்பினார். அவர் மார்ச் 2ம் தேதி விசாரித்தார். நடவடிக்கை இல்லை. வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
காந்தி தரப்பில், ''சட்டத்திற்குட்பட்டே நிலப் பரிமாற்றம் நடந்துள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டு தவறானது," என மனு செய்தார். நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன், காந்தி தரப்பு வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகினர். அரசு வழக்கறிஞர் அன்பரசன், "எஸ்.பி.,மற்றும் போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை," என்றார். ஜூலை 13ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனையடுத்து இன்று காலையில் காந்தி அழகிரி உள்ளிட்ட 3 பேர் மீது மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜேஸ்வரி மனு இன்று காலை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, காந்தி அழகிரி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜேஸ்வரி தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தன் மீது நிலஅபகரிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்த காந்தி அழகிரி, மதுரை உயர்நிதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். காந்தி அழகிரி சார்பாக வழக்கறிஞர்கள் அபுடுகுமார், மோகன்குமார் ஆகியோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு செவ்வாய் அல்லது புதன்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.