இலங்கை பொருட்களை விற்காதே! நீல்கிரீஸ் அங்காடியை முற்றுகையிட்ட மாணவர்கள்!
சென்னை: இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அடையாரில் உள்ள நீல்கிரீஸ் சிறப்பங்காடியை 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் தயாராகும் பிஸ்கட், கேக் முதலிய திண்பண்டங்களை நீல்கிரீஸ் சிறப்பங்காடி பல ஆண்டுகளாக விற்று வருகிறது. ஏற்கனவே இலங்கை புறக்கணிப்பு குழு நீல்கிரீஸ் நிறுவனத்திடம் இப்பொருட்களை விற்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இவைகள் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் இருந்து வருகிறது , அதனால் இப்பொருட்களை விற்று வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்து இருந்தது. எனினும் நீல்கிரீஸ் நிறுவனம் தமிழர்களை கொன்று ஒழித்த நாட்டின் பொருட்களை தமிழர்களுக்கே விற்று வந்தது.
மாணவர்கள் போராட்டம்
இந்நிலையை நீல்கிரீஸ் நிறுவனத்தின் தமிழர் விரோத போக்கை கண்டிக்கும் வகையிலும் அந்நிறுவனத்திற்கு இறுதி எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் நீல்கிரீஸ் கடையின் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கடையை புறக்கணிப்போம்
நீல்கிரீஸ் நிறுவனம் உடனடியாக இலங்கை பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்தாவிட்டால் அனைத்து நீலகிரி கடைகளையும் தமிழர்கள் நாங்கள் புறக்கணிப்போம் என்ற செய்தியை நிறுவன அதிகாரிகளிடம் சொல்லப்பட்டது.
நீல்கிரீஸ் உறுதி
இம்முறை நீல்கிரீஸ் நிறுவனம் தங்கள் வசம் உள்ள இலங்கை பொருட்களை சில நாட்களில் அகற்றுவோம் என உறுதி அளித்தனர் .
தமிழகத்தில் விற்க கூடாது
இலங்கையில் இருந்து வந்து இங்கு விற்பனை செய்யப்படும் இலங்கை பொருட்களுக்கு இனி தமிழகத்தில் வரவேற்பு குறையும் எனத் தெரிகிறது .
போராட்டம் தொடரும்
தமிழகத்தில் இருந்து முற்றிலும் இலங்கை பொருட்கள் புறக்கணிக்கப்படும் வரை இந்த போராட்டம் ஓயாது என மாணவர்கள் தெரிவித்தனர்.