106 மீனவர்களை விடுதலை செய்த கையோடு 3 மீனவர்களை சிறை பிடித்த இலங்கை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதப்பட்டனத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். பொங்கல் சமயத்தின்போதும் கூட இலங்கை கடற்படை இவ்வாறு நடந்துள்ளது தமிழக மீனவர்களை வேதனைக்குள்ளாக்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்திய எல்லையான கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 3 மீனவர்களையும் சுற்றி வளைத்தனர்.
சுற்றி வளைத்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட 3 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் மாலைக்கு பிறகு நீதிமன்றத்தில் 3 மீனவர்களையும் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இலங்கை சிறையில் இருந்த 106 மீனவர்களை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களுக்கு முன்னர் இலங்கை விடுதலை செய்தது. இவர்கள் தாயகம் திரும்புவதற்கு முன்னதாகவே தற்போது 3 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.