2000 ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2000 மீனவர்களை இலங்கைக் கடற்படை விரட்டியடித்தது. துப்பாக்கியைக் காட்டி இலங்கை கடற்படை மிரட்டியதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 617 விசைப் படகுகளில் நேற்று இரவுக்கு மேல் கடலுக்குச் சென்றனர். அதிகாலையில் கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் ஐந்து படகுகளி்ல ஏறி மீன்பிடி வலைகளை அறுத்து எறிந்தனர். பின்னர் துப்பாக்கியைக் காட்டி மீனவர்களை மிரட்டி அங்கிருந்து போய் விடுமாறு எச்சரித்தனர்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை விட்டு விட்டு படகுகளைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து விரைந்தனர். இதுகுறித்துக் கூறிய ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத் தலைவர் சகாயம் கூறுகையில், 2000க்கும் மேற்பட்ட மீனவர்களை துரத்தியடித்துள்ளது இலங்கைக் கடற்படை. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.