கச்சத்தீவு அருகே விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்.. வலைகளை அறுத்து இலங்கை படை வெறியாட்டம்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீனவர்களின் வலைகளையும் அவர்கள் அறுத்தெறிந்ததால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த சுமார் 3000 மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். காற்றின் வேகம் கடல் அலையின் சீற்றம் ஆகியவை அதிகமாக இருந்தது. இருப்பினும் மீனவர்கள் அதனை சமாளித்து நடுக் கடலில் மீன் பிடித்து கொண்டுருந்தனர்.
சில படகுகள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டன. அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இங்கு மீன் பிடிக்கக்கூடாது உடனே கிளம்புங்கள் என எச்சரித்துள்ளனர். இதனை கேட்ட மீனவர்கள் அவசர, அவசரமாக அங்கிருந்து புறப்பட்ட தயாரானார்கள். இந்த நேரத்தில் இலங்கை கடற்படையினரில் சிலர் மீனவர்களின் படகுகளுக்கு வந்து அவர்களை தாக்கி விரட்டியடித்தனர். மேலும் மீனவர்களின் வலைகளையும் அறுத்து வீசினர்.
இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் வேகம் வேகமாக அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டனர். இலங்கைப் படையினர் இப்படி தொடர்ந்து அட்டூழியம் செய்து வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.