திருமணம் நடந்த சில மணி நேரங்களிலேயே "பிரிந்த" மணமக்கள்...!
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிக்கும், இலங்கையில் வசித்து வரும் அவரது உறவுப் பெண்ணுக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே மாப்பிள்ளையை போலீஸார் அழைத்துச் சென்று விட்டனர். பெண்ணும் உறவினர்களுடன் கண்கள் கலங்க புறப்பட்டுப் போனார்.
2011 ஆம் ஆண்டு போலி ஆவணத்தில் இந்தியாவுக்கு வந்ததாக கூறி வவுனியாவைச் சேர்ந்த கிருஷ்ணலிங்கம் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டார். இந்நிலையில், திருமணம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரி கடந்த 8 ஆம் தேதி தமிழக அரசுக்கு கிருஷ்ணலிங்கம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று திருமணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வவுனியாவை சேர்ந்த மணப்பெண்ணான அவரது உறவுப் பெண் வசந்தமலர் மூன்று மாத சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்தார். இவர்களின் திருமணம் பலத்த பாதுகாப்புடன் எளிய முறையில் செய்யாறில் நேற்று நடைபெற்றது. பதிவாளர் அலுவலகத்துக்கு அருகில் இருந்த முருகன் கோவிலில் மணப்பெண் வசந்தமலருக்கு தாலி கட்டிய மணமகன் கிருஷ்ணலிங்கம், பின்னர் பதிவு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தில் மணப்பெண்ணுக்கு நெருக்கமான 5 உறவினர்கள் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த சிலமணி நேரத்திலேயே கிருஷ்ணலிங்கம் பாதுகாப்புடன் செய்யாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். மணமகள் வசந்தமலர், சென்னை பல்லாவாரத்தில் உள்ள அவரின் உறவினரின் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
கிருஷ்ணலிங்கத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனைவி வசந்தமலர் சந்திக்க அனுமதி தரப்பட்டுள்ளது.