அகதிகள் முகாம்களை மூடக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் ஈழத் தமிழர் செந்தூரன்
சென்னை: தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்கள் அனைத்தையும் மூடக் கோரி செந்தூரன் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சென்ற ஆண்டு பூந்தமல்லி சிறப்பு முகாமில் 42 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் செந்தூரன். தானும் மற்ற முகாம்வாசிகளும் விடுதலை அடைய வேண்டும் என உண்ணா நிலைப் போராட்டவிரதப் போராட்டம் நடத்திய செந்தூரனுக்கு ஒட்டுமொத்த தமிழகமே ஆதரவு தந்தது. தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் செந்தூரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதன் பலனாக இறுதியில் செந்தூரன் விடுவிக்கப்பட்டார். செந்தூரன் மட்டுமல்லாமல் 30க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் விடுதலை ஆனார்கள்.
செந்தூரன் விடுதலை பெற்று தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். எனினும் தமிழக அரசின் கியூ பிரிவு காவல்துறை அவரை விடுவதாக இல்லை. அவரை நாடு கடத்த உத்தரவை பெற்றது. இதற்கிடையில் செந்தூரன் தன்னை நாடு கடத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து அவரை நாடு கடத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கியூ பிரிவு காவல்துறை வேறு வழிகளில் செந்தூரனுக்கு தொந்தரவு கொடுத்து வந்தது. செந்தூரனின் உறவுக்கார பெண்மணியை வைத்து அவரை வேவு பார்த்தது. இதனை அறிந்த செந்தூரன் உறவுக்கார பெண்ணை கண்டித்து உள்ளார். இதையே காரணமாக வைத்து செந்தூரன் உறவுக்கார பெண்ணை தாக்கினார் என்று பொய் வழக்கு போட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.
மூன்று வாரம் சிறைவாசம் அனுபவித்து சிறையில் இருந்து வெளியேறிய செந்தூரனை கியூ பிரிவு காவல்துறை அகதிகள் சிறப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு அகதிகள் முகாமில் அடைத்தது. எந்தவித காரணமும் இன்றி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செந்தூரன் இப்போது சிறப்பு முகாம்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இன்றுடன் நான்காவது நாளாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார். தமிழக அரசின் சார்பில் அவருக்கு எந்தவித கரிசனமும் காட்டப்படவில்லை. செந்தூரனை நாடு கடத்தவே இன்று வரை முயற்சி செய்கிறது தமிழக அரசு. செந்தூரன் இலங்கை சென்றால் நிச்சயம் இலங்கை அரசு அவரை சாகும்வரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தும் அல்லது கொன்றுவிடும். தஞ்சம் தேடி தமிழகம் வந்தாலும் தமிழக அரசும் இலங்கை அரசைப் போலவே நடந்து கொள்வது வருத்தம் அளிப்பதாக செந்தூரன் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்ற தீர்மானம் இயற்றிய தமிழக முதல்வர் ஏன் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களை மூட மறுக்கிறார்? சிறப்பு முகாம்களில் தவிக்கும் பல தமிழர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சொல்லவொண்ணா துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இவர்களை விடுதலை செய்து தமிழர்களுக்கு நீதி வழங்காமல், ஈழத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவேன் என தமிழக முதல்வர் சொல்வது கபட நாடகமாக தெரிகிறது என்று கூறுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். உண்மையில் ஈழத் தமிழர்கள் மேல் தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால் முதலில் செந்தூரன் மற்றும் அனைத்து சிறப்பு முகாம் வாசிகளையும் உடனடியாக விடுதலை செய்யட்டும் என்று கூறிகின்றனர் தமிழீழ ஆதரவாளர்கள்.