பொங்கலை முன்னிட்டு விற்பனைக்கு குவியும் பொருட்கள்.. மக்கள் கூட்டத்தால் திணறும் கன்னியாகுமரி!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் கரும்பு, மஞ்சள், பானைகள் உள்ளிட்ட பொருட்கள் குவிந்து வருவதால் அதை வாங்குவதற்காக பொது மக்கள் சந்தையில் அலைமோதி வருகின்றனர்.
நாகர்கோவில்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் கரும்பு, மஞ்சள், பானைகள் உள்ளிட்ட பொருட்கள் குவிந்து வருவதால் அதை வாங்குவதற்காக பொது மக்கள் சந்தையில் அலைமோதி வருகின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14ம்தேதி கொண்டாடப்படுகிறது. நாளை (13ம்தேதி) போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளன. வீடுகளில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளும் நடந்த வண்ணம் உள்ளன.
பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் போகி ஆகும். எனவே வீடுகளில் தேவையில்லாத பொருட்களை தீ வைத்து கொளுத்துவார்கள். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் போகி கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். கரும்பு, மஞ்சள் கிழங்கு, பனங்கிழங்கு, பனை ஓலை உள்ளிட்டவை விற்பனைக்காக ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பொங்கல் சீர்வரிசை பொருட்கள் அளிப்பதற்காக பித்தளை மற்றும் வெண்கல பானைகள் வாங்குவதிலும் மக்கள் ஆர்வமாக உள்ளனர். மண் பானைகளும் பல்வேறு விதமான வகைகளில் விற்பனைக்காக வந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் வடசேரி, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், மார்த்தாண்டம், திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக கரும்புகள் வந்து குவிந்துள்ளன. திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் வந்துள்ளன.
ராஜபாளையம், நிலக்கோட்டை, திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சள் குலைகள் மற்றும் பனங்கிழங்கு வியாபாரிகள் வந்துள்ளனர். கரும்பு, பனங்கிழங்கு, காய்கறிகளின் விலைகள் கடந்த ஆண்டை விட கடுமையாக உயர்ந்துள்ளன.
ஜி.எஸ்.டி. வரி காரணமாக வெண்கல மற்றும் பித்தளை பாத்திரங்கள் கடந்த ஆண்டை விட கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ளன. கரும்பு ஒரு கட்டு ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டில் 15 கரும்புகள் உள்ளன. தனியாக ஒரு கரும்பின் விலை தரத்துக்கேற்ப ரூ.50, 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் கிழங்கு ரூ.30, 50, 80 என பல்வேறு வகைகளில் தரத்துக்கேற்ப விற்பனையாகிறது. பனங்கிழங்கு ஒரு கட்டு ரூ.120, ரூ.140 என விற்பனையாகிறது.