திருச்செந்தூர் முருகன் கோவிலில் ‘சூரசம்ஹாரம்’... நிரம்பி வழிந்த சிறப்பு ரயில்கள்!
நெல்லை: நேற்று சூரசம்ஹாரத்தை ஓட்டி நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்ட சிறப்பு ரயில்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இதை ஓட்டி நெல்லை சுற்று வட்டார பகுதி மக்கள் சிறப்பு பஸ்களிலும், ரயில்களிலும் காலை முதலே திரண்டதால் பலருக்கு இடம் கிடைக்காமல் அல்லாடினர்.
சிறப்பு ரயில்கள்...
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணி, 9.35 மணி, 11.20, 1.25, 6.40, 10.45 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தள்ளு முள்ளு...
சிறப்பு ரயிலல் பயணிகள் ஓடி சென்று இடம் பிடிக்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் சிறப்பு ரயிலாக ஓருமுறை திருச்செந்தூருக்கு சென்று வந்தது.
பயணிகள் கூட்டம்...
அப்போது அதில் ஏசி பெட்டியை மட்டும் கழற்றி விட்டு சிறப்பு ரயிலாக அனுப்பி வைத்தனர். ஆனபோதும், பயணிகள் கூட்டத்தை கட்டுபடுத்த நெல்லை ரயில்வே போலீசார் படாதபாடு பட்டனர்.
உட்கார இடமில்லை...
மதியத்திற்கு மேல் சென்ற ரயில்களில் பயணிகள் உட்கார கூட இடம் இல்லாமல் நின்று கொண்டும், வாசல் அருகே தொங்கி கொண்டும் பயணம் செய்தனர்.