இந்திய விமானத்தை கடத்த சதி.. லஷ்கர் தீவிரவாதிகளின் திட்டம் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி : பாகிஸ்தான் உளவுத்துறையுடன் சேர்ந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இந்திய விமானத்தைக் கடத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் 69 வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலகலமாக கொண்டாடப்படவுள்ளதையடுத்து நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உதவியுடன் இந்திய விமானத்தை கடத்த லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் டெல்லியிலிருந்து காபூல் செல்லக்கூடிய விமானத்தை கடத்தி வெடிக்கச்செய்ய பாகிஸ்தானை மையமாக கொண்ட லஷ்கர் தீவிரவாத இயக்கம் சதித்திட்டம் வகுத்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.