பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்றே கடைசி... ஏப்.1 முதல் 11 பழைய நோட்டுக்களை வைத்திருந்தாலே அபராதம்
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்றே கடைசி நாளாகும். நாளை முதல் 10க்கும் மேற்பட்ட பழைய நோட்டுக்களை வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும்.
சென்னை: பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டும் மாற்றிக் கொள்வது இன்றோடு முடிவடைகிறது.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்வதற்கு, முதலில் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இந்த உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. திடீரென்று அந்த தொகை ரூ.2,000 ஆக குறைக்கப்பட்டது. இதனால் சாதாரண மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில், ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கு பிறகும் பழைய ரூபாய் நோட்டுக்களை யாராவது வைத்திருந்தால், அதை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மற்றும் குறிப்பிட்ட சில வங்கிகளின் கிளைகளில் மட்டும் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மார்ச் 31ம் தேதியான இன்று பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி மற்றும் சில குறிப்பிட்ட வங்கி கிளைகளில் மாற்றிக் கொள்வது முடிவடைகிறது. நாளை முதல் யாராவது 10க்கும் மேற்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் அவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.