தமிழகம், புதுச்சேரி 4 தொகுதி இடைத்தேர்தல்கள்: வேட்புமனு தாக்கல் நிறைவு- 139 பேர் மனுத்தாக்கல்
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.
சென்னை: தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 139 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில், நாளை மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. வேட்புமனுக்களை வாபஸ் பெற 5ம் தேதி கடைசி நாளாகும்.
கடந்த மே மாதம் தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் நடந்தது. அதிக அளவில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததால் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தலை ஆணையம் ரத்து செய்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சீனிவேலு, மரணமடைந்ததால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த 3 தொகுதிகளுக்கும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடும்து அக்டோபர் 26ம் தேதியன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. நவம்பர் 2ம் தேதி மாலை 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
தஞ்சாவூர் தொகுதியில் 36 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 59 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 44 பேரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஜான்குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், காலியாக உள்ள அந்தத் தொகுதிக்கும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் புதுச்சேரி முதல்வருமான நாராயணசாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை 3ம் தேதி நடக்கிறது. தேர்தல் பொதுப் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மனுக்களை பரிசீலிப்பர். இதற்காக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட் டுள்ள பொதுப் பார்வையாளர்கள் இன்று மாலை 3 தொகுதிகளுக்கும் செல்கின்றனர். போட்டியிட விரும்பாதவர்கள், 5ம் தேதி மாலைக்குள் மனுக்களை திரும்பப் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடக்கும் தொகுதிகள் அடங்கிய மதுரை, தஞ்சை, கரூர் மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.