அன்று அப்பல்லோ... இன்று அம்ருதா... ஜெயலலிதாவை மையம் கொண்ட புயல்
கடந்த ஆண்டு இதே நாளில் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா இன்று அம்ருதா என்ற பெண்ணின் மூலம் பரபரப்பான செய்தியாக பேசப்படுகிறார்.
Recommended Video
சென்னை: நான் ஜெயலலிதாவின் மகள் என்று கிளம்பியிருக்கிறார் அம்ருதா என்ற பெண்.
இதன் மூலம் ஊடகங்களில் பரபரப்பு செய்தியாகியுள்ளார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் போல மரணமும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.
இருக்கும் போது சரி... மறைந்த பின்னரும் சரி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.
உச்சநீதிமன்ற கதவை தட்டிய அம்ருதா ஒருபக்கம்... ஜெயலலிதாவிற்கு மகள் பிறந்தது உண்மைதான் என்று கூறும் அத்தை மகள் லலிதா இன்னொரு பக்கம் தற்போது ஊடகங்களுக்கு செய்தி கொடுத்து வருகின்றனர்.
பரபரப்பு பேட்டி
ஜெயலலிதாவிற்கு மகள் பிறந்தது உண்மைதான் என்றும் அதுவும் பிரசவம் பார்த்தது தனது பெரியம்மா ஜெயலட்சுமி என்றும் லலிதா பேட்டி கொடுத்து வருகிறார். ஆனால் அது அம்ருதாவா என்பது தெரியாது என்றும் கூறியுள்ளார் லலிதா.
அம்ருதா யார்?
அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவோ வாரிசு என்று யாரும் கிடையாது. ஜெயலலிதாவிற்கு மகளே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இவர் எதன் அடிப்படையில் இப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை.
சோதனை நடக்குமா?
அம்ருதாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அவர் உயர்நீதிமன்றத்தை நாடப்போகிறார். அம்ருதாவை பின்னால் இருந்து சிலர் இயக்குவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதாவை அவமானப்படுத்துவதற்காக யாரோ கிளப்பி விட்டது என்றும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
உடலை தோண்ட வேண்டுமா?
டிஎன்ஏ சோதனை நடத்த ஒருவேளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் அது அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சிகரமானதாக அமையும். ஏனெனில் இதனால் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும் என்பதால் உயர்நீதிமன்றம் அப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்கும் என்று கூறமுடியாது.
மையம் கொண்ட புயல்
கடந்த ஆண்டு இதே நாளில் அப்பல்லோவில் உடல் நலக்குறைவினால் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா. அப்போதும் ஊடகங்களில் அவர்தான் தலைப்புச் செய்தி. அம்ருதா மூலம் இப்போது பரபரப்பு செய்தியாக மாறியுள்ளார். ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமையை இப்போது அம்ருதா என்ற புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.