பொறுப்பு ஆளுநர் ஓடி வந்தார்.. வந்த வேகத்தில் திரும்பிச் சென்றார்.. மறக்க முடியாத டிச.4 #jaya
கடந்த ஆண்டு இதே நாளில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அவசர அவசரமாக சென்னை வந்தார் தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ்.
சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைக் காண அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் இன்று சென்னை விரைந்து வந்தார். வந்த வேகத்தி்ல அவர் திரும்பியும் சென்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் அதே மாதம் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 75 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததாகவும் அவர் ஓய்வு எடுப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் டிசம்பர் 5ம் தேதி அவர் மரணமடைந்ததாக அறிவிப்பு வெளியானது. முன்னதாக 4ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து லண்டனில் உள்ள மருத்துவர் பீலேவிடம் அப்பல்லோ மருத்துவர்கள் ஆலோசனைகளை பெற்றனர்.
இதனால் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. விடுப்பில் சென்ற போலீஸார், சுழற்சி முறையில் பணி முடித்து விட்டு வீடு திரும்பிய போலீஸார் என 12,000 போலீஸார் திரும்ப அழைக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மும்பையிலிருந்து தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் இரவு 11 மணி அளவில் சென்னை விரைந்தார். பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு சென்றார்.
20,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மருத்துவமனையின் முன்பு திரண்டனர். மேலும் அண்ணா சாலை வழியாக சென்றவர்கள் இரு சக்கர வாகனங்களை வழிநெடுகிலும் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு படையெடுத்தனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.
என்னதான் சாலைத் தடுப்பு போடப்பட்டிருந்தபோதிலும் மருத்துவமனையின் கட்டடங்கள் அருகே இருந்தும், சந்து பொந்து வழியாகவும் தொண்டர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். பொதுமக்களும் இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்துவிட்டு டிவி செய்திகளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
சென்னையில் பெரும் பரபரப்பு சூழ்ந்த அந்த டிசம்பர் 4ம் தேதி இன்று.