லிங்கா பிரச்சினை முடிந்தது... கோச்சடையான் தொடங்கியது... லதா ரஜினிகாந்த் மீது மோசடிப் புகார்!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தை இரண்டு பேருக்கு விற்று மோசடி செய்ததாக லதா ரஜினிகாந்த் மீது புகார் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ரஜினி தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என ஆட் பீரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
லிங்கா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யக் கோரி வினியோகஸ்தர்கள் நடத்தி வந்த போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போது கோச்சடையான் விவகாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3டி அனிமேஷன் திரைப்படம் கோச்சடையான். இப்படத்தை விநியோகம் செய்ததில் லதா ரஜினிகந்த் ரூ. 10 கோடி மோசடி செய்ததாக அண்மையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலத்தில் தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகர் புகார் மனு அளித்தார்.
ஆனால், லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளரான மீடியா ஒன் குளோபல் நிறுவனம் விளக்கம் தெரிவித்திருந்தது. அதில், இப்பட பரிவர்த்தனைகளில் லதா ரஜினிகாந்த் அவர்கள் ஒரு போதும் தலையிடவில்லை என தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், கோச்சடையான் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக கொடுக்கப் பட்ட தொகையை ரஜினிகாந்த் தலையிட்டு பெற்றுத் தர வேண்டும் என ஆட் பீரோ தனியார் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நாகர், மதுபாலா இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
‘கோச்சடையான்' திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் ரிலீ ஸானது. இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக மீடியா ஒன் நிறுவனம் எங்களிடம் ரூ.10 கோடியை கடனாக பெற்றது. மீடியா ஒன் நிறுவனத்துக்காக கடன் ஒப்பந்தத்தில் லதா ரஜினிகாந்த் கையெழுத்திட்டார். படம் வெளியானதும் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாக உறுதியளிக்கவும் செய்தார். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.
நாங்கள் கொடுத்த ரூ.10 கோடிக்கு 12 சதவீதம் கமிஷன் மற்றும் வட்டியுடன் மொத்தம் ரூ.15.84 கோடி திருப்பித் தரவேண்டும். ஆனால் இதுவரை ரூ.9 கோடியை மட்டுமே திரும்பக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ.6.84 கோடியை தராமல் இழுத்தடித்து வருகிறார்கள். இந்த பிரச்சினை குறித்து லதா ரஜினிகாந்த் சரியான பதில் கூற மறுக்கிறார். இதற்காக நாங்கள்தான் அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும். மாறாக அவர்கள் எங்கள் மீது வழக்கு போட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த பிரச்சினையை ரஜினிகாந்த் கவனத்துக்கு கொண்டு போக நினைத்தோம். ‘இந்த சின்ன பிரச்சினைக்கெல்லாம் அவரிடம் பேச வேண்டாம்' என்று லதா ரஜினிகாந்த் கூறினார். இந்த பிரச்சினையில் ரஜினிகாந்த் தலையிட்டு பணத்தை பெற்றுத் தரவேண்டும்' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.