குழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுங்க.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லதா ரஜினிகாந்த் புகார்
சென்னையில் மாயமாகும் குழந்தைகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது
சென்னை: குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம், லதா ரஜினிகாந்தின் சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லதா ரஜினிகாந்த் தலைமையில் இயங்கி வரும் சிட்டிசன் பிளாட்பார்ம் அமைப்பு சார்பில் நேற்று அதன் தலைவர் நிர்மல் புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குழந்தைகள் திருட்டு சம்பவம் தொடர் கதையாக உள்ளது. சென்னையில் உள்ள பிளாட்பாரம் மற்றும் குடிசை பகுதியில் வசிக்கும் இளம் குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் மாயமாகின்றனர்.
குறிப்பாக பெண் குழந்தைகள் தான் அதிகளவில் காணாமல் போகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 15 ஆயிரத்து 200 குழந்தைகள் காணாமல் போனது. இதில் 14,500 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 700 குழந்தைகளை தேடி வருவதாகவும், அதில் 57 குழந்தைகளை கண்டு பிடிக்க முடியாது என காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பெண் குழந்தைகளை திருடும் கும்பல் அவர்களை வெளி நாடுகளுக்கு கடத்தவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் அதிகளவில் இந்த சம்பவங்கள் நடக்கிறது. குழந்தைகள் கடத்தப்படுவது குறித்தும், அதை தடுப்பது குறித்தும் விரைவில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த லதா ரஜினிகாந்த் தலைமையில் பிரசாரம் திட்டம் விரைவில் தொடங்க உள்ளோம். மாயமாகும் குழந்தைகளை கண்டுபிடிக்கும் போலீசாருக்கு எங்கள் அமைப்பு எந்த உதவியும் செய்ய தயராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.