கோவில் விழாவில் பயங்கரம்.. சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோவில் திருவிழாவின் போது சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மணிகண்டன் (18) என்பவர் மதுரையில் உள்ள சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில், ஆடி அமாவாசை, ஆடி பெருக்கை முன்னிட்டு தனது தெருவில் நடக்கும் கருமாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை சுமார் 9 மணியளவில் தனது நண்பர்களை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் கருமாரி அம்மன் கோவிலின் பின்புறம் வழியாக மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் மணிகண்டனை அரிவாள் மற்றும் கத்தியை வைத்து பயங்கரமாக பல இடங்களில் வெட்டி சாய்த்தனர்.
இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவில் திருவிழா என்பதல் அதிக அளவில் ஒலி பெருக்கி சத்தம் கேட்டதால் யாரும் இதை கவனிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனை பார்த்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி, உடலை உடனே அப்புறப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர் மணிகண்டனை கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை திருத்தங்கல் போலீசார் தேடி வருகின்றனர். திருவிழாவின் போது நிகழ்ந்த இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.