நெல்லை ஆட்சியரை கைது செய்ய வேண்டும்... உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாணவி நந்தினி கைது!
கந்துவட்டி கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி : நெல்லையைச் சேர்ந்த இசக்கிமுத்து குடும்பத்தார் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமான ஆட்சியர், காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நேற்று முன் தினம் இசக்கி முத்து தன்னுடைய குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். கந்துவட்டி கொடுமைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நடைபெற்ற தீக்குளிப்பு சம்பவத்தில் இசக்கியின் மனைவி மற்றும் 2 மகள்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தன்னுடைய தந்தையுடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். கையில் பதாகை ஏந்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்அலுவலக வாசலில் போராட்டத்திற்காக அமர்ந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என்று கூறி நந்தினியையும், அவருடைய தந்தையையும் அழைத்து சென்றனர். மாணவி நந்தினி தற்போது பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.