அம்மா புராணம் பாடும் அமைச்சர்கள் 2016ல் அனுபவிப்பார்கள்: குஷ்பு சாபம்
சென்னை: அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை என்பது இல்லை. அமைச்சர்கள் மக்களை சந்திக்காமல் அம்மா புராணத்தையே பாடுகிறார்கள். இதற்கான பலனை அவர்கள் 2016ம் ஆண்டு அனுபவிப்பார்கள் என்று குஷ்பு கூறியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாசே ராஜேஷ், மண்டல தலைவர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மக்களுக்கு துன்பம்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். ஜெயலலிதா மீதான வழக்கின் காரணமாக எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
ஆம்பூர் சம்பவம்
ஹெச். ராஜா வீடு தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஆம்பூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட, ஒழுங்கை காக்க வேண்டிய போலீசார் முதல்வருக்கு மட்டும் பாதுகாப்பு கொடுத்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.
அம்மா புராணம்
அமைச்சர்கள் மக்களை சந்திக்காமல் அம்மா புராணத்தையே பாடுகிறார்கள். அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை என்பது இல்லை. இதற்கான பலனை அவர்கள் 2016ம் ஆண்டு அனுபவிப்பார்கள்.
உலகம் சுற்றும் மோடி
பிரதமர் நரேந்திரமோடி உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். நாட்டில் நடக்கும் பல பிரச்சினைகள் குறித்து அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இனிமேலும் அவர் பதில் அளிப்பார் என்ற நம்பிக்கை இல்லை. ‘வியாபம்' பிரச்சினையில் உச்சநீதிமன்றம் கண்காணிப்போடு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.