"டூர்" போக காசு கேட்டு முற்றுகையிட்ட மாணவர்கள்.. ரூ 1 லட்சம் கொடுத்து அனுப்பி வைத்த ரங்கசாமி!
புதுவை: சுற்றுலா செல்ல உதவித்தொகை வழங்கக்கோரி புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டசபையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கினார்.
புதுச்சேரியில் உள்ள அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் ஆண்டுதோறும் கல்வி சுற்றுலாவாக டெல்லி சென்று உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். இதற்காக அவர்களுக்கு புதுவை அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதன்படி அவர்கள் இன்று (வியாழக்கிழமை) டெல்லிக்கு புறப்பட உள்ளனர். ஆனால் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சட்டசபை முற்றுகை
இதைத்தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் நேராக சட்டசபைக்கு வந்தனர். அவர்கள் உதவித்தொகை வழங்கக்கோரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமையில் சட்டசபையை முற்றுகையிட்டனர். மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து புதுவை சட்டசபையின் வாசல் கதவுகள் இழுத்து பூட்டப்பட்டன. அங்கு கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
நடுரோட்டில் மறியல்
இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜிந்தாகோதண்டராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். சிறிது நேரத்தில் அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் பாரதி பூங்காவிற்குள் சென்று அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்களை அதிகாரிகள் யாரும் சந்தித்து பேசவில்லை.
ரங்கசாமி உதவி
இந்தநிலையில் சட்ட சபைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி மாணவர்களின் போராட்டம் குறித்து கேள்விப்பட்டார். உடனடியாக மாணவர்களை அவர் அழைத்து பேசியதோடு அவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியை வழங்கினார். அதன்பின் மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.