காவிரி… நீல நிற ரிப்பன் அணிந்து சென்னை சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி சென்னை தரமணி வளாகத்தில் பயிலும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் மத்திய அரசு அதனை அமைக்க மறுத்துள்ளது. மத்திய அரசின் கர்நாடக சார்பு போக்கைக் கண்டித்து தமிழக முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் அரசியல் சாசன விரோதப்போக்கை கண்டித்து இன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் கையெழுத்துப் பேரணி நடத்தியுள்ளனர். அரசியல் சாசனப்பிரிவு 262-ன் கீழ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் அதனை மத்திய அரசு உடனே செய்ய வேண்டும் என்றும் காவிரி முழக்கம் என்ற பெயரில் அமைதி போராட்டத்தை கடந்த 2 நாட்களாக சட்ட மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த அமைதிப் போராட்டத்தின் ஒரு அங்கமாக, கடந்த இரண்டு நாட்களாக நீலநிற ரிப்பன் பட்டைகளை அணிந்து கல்லூரி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து 3 நாட்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தின் கடைசி நாளான இன்று காவிரி பிரச்சனைத் தொடர்பான வாதங்களை சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் வகையில், மாணவர்கள் கையெழுத்து பேரணி நடத்தியுள்ளனர். தமிழகத்தின் நியாயமான, சட்டப்படியான கோரிக்கைகளை இந்திய பிரதமருக்கும், தமிழக கவர்னருக்கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் மற்றும் கர்நாடக முதலமைச்சருக்கும் தபால் மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் அனுப்ப உள்ளனர்.