கொந்தளிப்பில் தமிழகம்… ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நெல்லை, மதுரையில் பிரமாண்ட பேரணிகள்!
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தியுள்ளனர். மதுரையிலும் 4வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.
திருநெல்வேலி: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி நெல்லையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணி நடத்தினார்கள்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீப்பொறி, தமிழகம் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
நெல்லை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள், பெண்கள் என அனைவரும் போராட்டக் களத்தில் நின்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை எதிர்த்தும் போராடி வருகின்றனர்.
நெல்லை
சட்டக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் சட்டக் கல்லூரியில் வளாகத்தில் ஒன்று கூடினார்கள். பின்னர் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கிய பின்னர் , ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரிய மனு ஒன்றை ஆட்சியரிடம் அளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்து வகையில் மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் சட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை
இதே போன்று மதுரையில் 4வது நாளாக இன்றும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் கோரிப்பாளையத்தில் ஒன்றிணைந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு என்பது எங்களது வரலாறு இதனை நடத்தியே தீர வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
திண்டுக்கல்
இதே போன்று திண்டுக்கல் மாவட்டத்திலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் கலந்து கொண்ட மாணவர்கள், அரசியல் கட்சிகள் 11 மாதங்களாக அமைதியாக இருந்துவிட்டு தற்போது திடீரென்று போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்கள் கூறினார்கள்.
இதனையடுத்து மதுரை, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.