போலி உயில் மூலம் சொத்தை அபகரிக்க திட்டம் - பொய் சாட்சிக்கு மறுத்த கோவை வக்கீலுக்கு அடி, உதை!
கோவை: கோவையில் போலி உயில் மூலம் சொத்தை அபகரிக்க நினைத்த கும்பலுக்கு சாதகமாக சாட்சி சொல்லவராத வழக்கறிஞர் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், வடவள்ளியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சதீஷ்குமார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து சதீஷ்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச்சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் கோவையை சேர்ந்த பழனிவேல், ஆனந்த், பாபு, சவுந்தரராஜன் ஆகிய 4 பேர் தான் சதிஷ்குமாரை தாக்கியதாக தெரியவந்தது. அவர்கள் 4 பேரும் சேர்ந்து ஆள் மாறாட்டம் செய்து இறந்து போன நாராயணசாமி என்பவர் பெயரில் வழக்கறிஞர் சதீஷ்குமார் மூலம் போலி உயில் தயாரித்து உள்ளனர்.
அவரது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சுருட்டும் நடவடிக்கைக்கு அந்த போலி உயிலுக்கு, நாராயணசாமி போல் சவுந்தரராஜனே கையெழுத்து போட்டுள்ளார்.
இதுபற்றி வழக்கறிஞர் சதீஷ்குமாருக்கு தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் இதற்கு நான் உடந்தையாக இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மேற்கண்ட 4 பேரும் சேர்ந்து அந்த உயில் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல வேண்டும் என்று கூறி சதீஷ்குமாரின் வீட்டுக்குள் புகுந்து மிரட்டி உள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அவரை 4 பேரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆனந்த் என்பவரை கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.