நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி ஹைகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சட்டசபையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பு செல்லாது என மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக நல வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே.பாலு இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதனை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் எதிர்க்கட்சியான திமுக பெரும் அமளியில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சியான திமுக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் என சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சமூக நல வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே.பாலு மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் குற்றவாளி ஜெயலலிதா படத்துக்கு முன்பு முதல்வராக பழனிசாமி பெறுப்பேற்றது சட்டவிரோதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.