வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலைதான் செய்யப்பட்டார் - நீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை தாக்கல்
ஹைகோர்ட் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக்குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை: சென்னை ஹைகோர்ட் வக்கீல் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் கொலைதான் செய்யப்பட்டார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் சங்கரசுப்பு. இவரது மகன் சதீஷ்குமார் கடந்த 2011ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஐ.சி.எப். ரயில்வே காலனியில் உள்ள குளத்தில் மீட்கப்பட்டது. இந்த வழக்கு பல்வேறு விசாரணைகளை கடந்தும், உரிய விடைகிடைக்காமல் இருந்தது.
இதனைத்தொடர்ந்து சதீஷின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை உயர்நீதிமன்றம் நியமித்தது. தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த இந்த குழுவினர். தற்போது உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் சதீஷ் கொலை தான் செய்யப்பட்டுள்ளார் என்றும், அதுதொடர்பான பல தடயங்களை விசாரணை அதிகாரிகளே அழித்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலையில் தடயத்தை அழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது.