சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் : பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு அடி, உதை
சிவகங்கையில் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தபோது, பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு அடி, உதை விழுந்தது.
சிவகங்கை : சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செல்லும் சாலை தரமில்லாமல் இருப்பதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பேருந்தை இயக்கிய ஓட்டுநனருக்கு அடித்து உதைத்தனர்.
சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செல்லும் புதூர் சாலை படு மோசமாகவும் தரமில்லாததாக இருந்ததால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகினர்.
3 ஆண்டுக்கு முன்பு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அதிமுக ஒப்பந்ததாரர் சிவா என்பவரால் போடப்பட்ட புதிய சாலை, போதிய தரமில்லாததாலும் பல முறை மறு சீரமைப்பு செய்தும், குண்டும் குழியுமாக இருந்ததால் அப்பகுதி வழியாகச் செல்லும் வழக்கறிஞர்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டனர்.
சாலையைச் செப்பனிடக் கடந்த ஓர் ஆண்டாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பழைய நீதிமன்றத்தில் இருந்து காந்தி வீதி அரண்மனை வாசல் வழியாக பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்து பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த மாவட்ட அதிகாரிகள் வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை, மாற்று வழியில் ஓட்டுநர் செல்வகுமார் இயக்கினார்.
இதனைப்பார்த்த வழக்கறிஞர்கள் கூச்சலிட்டபடி பேருந்தைத் துரத்திச் சென்றனர். இதனால் ஓட்டுநர் செல்வகுமார் பேருந்தை வேகமாக இயக்கினார். அப்போது தங்கபாண்டியன் என்கிற வழக்கறிஞர் கீழே விழுந்து காயமடைந்தார்.
இதனையடுத்து பேருந்தை துரத்திச் சென்று பிடித்த வழக்கறிஞர்கள் ஓட்டுநர் செல்வகுமாரைப் பிடித்து அடித்து உதைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வட்டாட்சியர் கந்தசாமி மற்றும் டி.எஸ்.பி மங்களேஸ்வரன் ஆகியோர் தற்போது வழக்கறிஞர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.