பரபரப்பான அரசியல் சூழ்நிலை நடுவே, கமலுடன் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு
சென்னை: நடிகர் கமல்ஹாசனுடன் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்தார்.
ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கமல்ஹாசனை சந்தித்த பிறகு நிருபர்களிடம் பி. ஆர். பாண்டியன் அளித்த பேட்டி:
30 நிமிடத்திற்கு மேலாக கமலுடன் உரையாடினோம். விவசாயிகளையும், தமிழக மண்ணையும் காப்பது குறித்து பல தொலைநோக்கு திட்டங்களை கமல் வைத்துள்ளார். அதுகுறித்து ஆலோசித்தோம்.
மரம் வளர்ப்பு
மழை பொழிவு குறைந்துவிட்டது. எனவே மரங்கள் வளர்ப்பது தொடர்பான சமூக கருத்துக்களை பகிர்ந்தோம். இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்தோம். தமிழக மக்கள், மண் மீது அன்பு கொண்டுள்ள பெறு நிறுவனங்கள், பெரிய நபர்களை தொடர்பு கொண்டு பணியாற்ற முடிவு செய்தோம். நடிகர்களை நான் மொத்தமாக புறக்கணிப்பது கிடையாது.
சமூக சீர்திருத்தவாதி
கமல் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்பதால் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளேன். கிராம மண்வாசனை கொண்டவர் கமல்ஹாசன். இந்த அடிப்படையில்தான் அவரை சந்தித்தேன்.
கமல் அரசியல்
எங்கள் போராட்டத்திற்கு கமலிடம் ஆதரவு கேட்கவில்லை. விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்து போராட்டத்தை கமல் தொடர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம். கமல் அரசியலுக்கு வர வேண்டுமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கமல் எளிதில் அந்த முடிவை எடுக்க மாட்டார்.
அரசியலுக்காக விவசாயம் அழிப்பு
அதிமுக அரசியல் பரபரப்புகளால் விவசாயிகள் பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்தும் கமலிடம் ஆலோசனை நடத்தினோம். தினமும் புது சட்டங்கள் போட்டு விளை நிலங்களை அபகரிக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.