தமிழகத்தில் கூட்டணி பற்றி தலைமைதான் முடிவெடுக்கும்- அமைச்சர் ஜெயக்குமார், தம்பித்துரை
அதிமுக நாளிதழில் கட்டுரை எழுதியவர் பாஜகவுடன் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இரட்டைக்குழல் துப்பாக்கி எல்லாம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரையும் கூறியுள்ளனர்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மாவில் நேற்று கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையோடு, மத்தியில் ஆளும் பாஜகவும் தமிழகத்தை ஆளும் அதிமுகவும் ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயல்பட்டு, இறுதி முடிவினை எட்டிக் கொண்டிருக்கிறது.
எங்கே இருவரும் ஒற்றுமையாக இருந்து காவிரி பிரச்னையில் வெற்றி அடைந்துவிடுவார்களோ? என்ற அச்சம் கொண்டிருக்கும் திமுக, தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது. எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக. - பாஜக உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க முடியாது என்றும் இந்த உறவைக் கெடுக்க நினைக்கும் திமுகவின் திட்டம் பலிக்காது.
இந்திய அரசியலில் அதிமுகவும், பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை 2 கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும் என்றும் அந்த நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'நமது புரட்சி தலைவி அம்மா' நாளேட்டில் வெளியான கட்டுரை தவறானதாக இருக்கக்கூடும்.
மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருப்பது என்பது வேறு, கட்சிகள் இணக்கமாக இருப்பது என்பது வேறு. இன்றைக்கு இரட்டை குழல் துப்பாக்கியே இல்லை. ஒற்றைக்குழல் துப்பாக்கிதான் உள்ளது. அதில் சுட்டால் ஒரு குண்டுதான் வரும் என்றும் தம்பித்துரை கூறினார்.
இதே கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக நாளிதழில் கட்டுரை எழுதியவர் பாஜகவுடன் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியாது. அதிமுகவும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்பது கட்டுரை மட்டுமே. கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும். திமுக ஆட்சிக்கு வரும் என ஸ்டாலின் கூறுவது நடக்காது. ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான் என்று கூறியுள்ளார்.
அப்போ ஏற்கனவே ஒபிஎஸ், ஈபிஎஸ் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவதாக கூறினார்களே... அதுவும் இல்லையா? என்று அமைச்சர் விளக்க வேண்டும்.